May 1, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த
படுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைக்கள் எடுத்து வருகின்றன.மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் மே 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.அதற்குப் பின் பொது முடக்கம் தளர்த்தப்படுமா அல்லது தொடரப்படுமா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் இதுவரை வெளியிடவில்லை.
இதனிடையே,கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சிவப்பு,ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்கள் நாடு முழுவதும் பிரிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதுமட்டுமின்றி
வெளி மாநிலங்களில் இருக்கும் நபர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அந்தந்த மாநிலங்கள் அழைத்து வரலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்த படுவார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த முழு நடவடிக்கையின் பேரில் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் மண்டலமாக கோவை மாறியிருக்கிறது. இதுவரை கோவையில் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்ட 2 பேர் இன்று வீடு திரும்பியுள்ளார்கள்.மொத்தமாக கொரோனா பாதிப்படைந்து அனுமதிக்கப்பட்ட 141 பேரில் தற்போது 7 பேர் மட்டுமே கோவை மாவட்டத்தில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்திற்கு மற்ற மாவட்டங்களிலிருந்தோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்தோ வருபவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைபடுத்த படுவார்கள் எனக் கூறியுள்ளார்.