June 30, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருபவர் வேல்மணி. கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதால் இவரது மகனும் வியாபாரத்துக்கு உதவி வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த வாரம் இரவு 9 மணிக்கு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி, டிபன் கடையை உடனே மூடும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால், காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் இருவரது செல்போனையும் பிடுங்கிக்கொண்டு ஒருமையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து கொண்டிருந்த பள்ளி மாணவர் தனது தாய் தந்தையை போலீசார் திட்டுவதை கண்டு ஆவேசம் அடைந்து உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை பிடுங்கியுள்ளார். இதனையடுத்து,போலீசார் சாவியை பிடுங்கிக் கொண்டு மாணவரை தாக்கினர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில்
கடந்த சில நாட்களாக வெளியாகி வைரலானது.இந்த நிலையில், சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.