March 6, 2019 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் 2019-2020 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டார்.
கோவை மாநகராட்சியின் 2019-2020 ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை மாநகராட்சி ஆணைய ஷரவன் குமார் ஜடாவத் , மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி, மற்றும் அலுவலகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார் ஜடாவத்,
கடந்த நிதி ஆண்டின் மொத்த வரவு ரூபாய் 1817.67 கோடி , செலவு ரூபாய் 1812.93 கோடி என உபரி ரூபாய் 4.74கோடி என தெரிவித்தார். கோவையில் உள்ள 8 குளங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்து 2 குளங்கள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு 5 குளங்கள் சீரமைக்கப்படும். இந்த ஆண்டு 3.6 மெகாவாட்டிற்கு சோலார்பிளான்ட் அமைக்கவும், திடகழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வெள்ளூர் குப்பை கிடங்கிற்கு ஒட்டு மொத்த குப்பையும் கொண்டு செல்லாமல் இருக்கவும், 35 இடங்களில் குப்பையை தரம்பிரித்து உரமாக்கும் மையங்களும் அமைக்கப்படும்.தண்ணீர் ஏ.டி.எம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை மக்களிடம் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், 74 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கவும், சிறப்பு சாலைகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநகராட்சி பள்ளியில் 6ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு வேதிக் கணக்கியல் பாடதிட்டம் சொல்லிக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மூலம் போட்டி தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க வசதியாக இருக்கும். கோவையில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி ஸ்டேடியம் முடிவடையும் நிலையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இண்டோர் ஸ்டேடியம் அமைக்கப்படும் எனவும் அப்போது தெரிவித்தார்.