August 4, 2018
தண்டோரா குழு
கோவை மாநகரம் முழுவதும் 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன – கோவை மாநகர காவல் ஆணையர் பெரியையா
கோவை மாநகரம் முழுவதும் சுமார் ஐந்தாயிரம் சிசிடிவி கேமராக்கள் இதுவரை கொடுத்த பட்டுள்ளதாகவும் அதில் 207 சிசிடிவி கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியையா தெரிவித்துள்ளார்…..
கோவை கடைவீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட டிகே மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 36 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை மாநகர காவல் ஆணையர் பெரியையா இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் லட்சுமி, பெருமாள், சுஜித்குமார், செல்வகுமார் உட்பட காவல்துறையினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பெரியய்யா,
சிசிடிவி கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்படுவது மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கடைவீதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 50 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 36 கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதேபோல் மாநகரின் அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக செயல்படுத்தப்படும். இதுவரை மாநகரம் முழுவதும் 5 ஆயிரம் கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் இதனால் சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் குற்றச்சம்பவங்களில் மிகப் பெரிய உதவியாக இந்த சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். 207 கேமராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் 10,000 கேமராக்கள் மாநகரம் முழுவதும் அமைக்கப்படும் பட்சத்தில் கோவை மாநகரம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.