December 29, 2018 தண்டோரா குழு
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் எம்.பி.ஏ. முன்னாள் மாணவர்கள் நாற்பதாண்டுகளுக்கு பிறகு தங்கள் குடும்பத்துடன் சந்தித்த
நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி.) தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த நிகழ்வில், 1978 ஆம் ஆண்டு எம்.பி.ஏ. பிரிவு மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அன்றைய காலத்தில் சென்னை மற்றும் கோவையில் மட்டுமே எம்.பி.ஏ. படிக்க இயலும் சூழல் இருந்த நிலையில், கோவை தனியார் கல்லூரியில் பயின்ற 31 பேர் என அனைத்து மாணவர்களும் இந்த சந்திப்பு நிகழ்வில் தவறாமல் கலந்துக்கொண்டனர். தங்களது திறமைகள், ஆங்கில புலமை, படிப்பில் ஈடுபாடு, ஒழுக்கம் என அனைத்து வகையிலும் தங்களுக்கு இந்த கல்லூரி மிகவும் உதவியதை நினைவுக்கூறும் வகையிலும், இந்த கல்லூரியில் பயின்றதால் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்வை நடத்தியதாக முன்னாள் மாணவர்கள் கூறினர்.
தற்போது இந்த கல்லூரியில் பயிலும் எம்.பி.ஏ., மாணவர்களை சந்தித்து செய்ய வேண்டியவை, வாழ்க்கையில் கற்க வேண்டியவை குறித்து பேசும் கலந்துரையாடல் நிகழ்வும், கோவை பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராயவும், வகுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த 31 மாணவர்களில் சிலர், ஐ.ஏ.எஸ்.,உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.