December 18, 2019
கோவை பாரதியார் பல்கலைக்கழக நுழைவாயிலில் தென்பட்ட பாம்பை, அங்கிருந்த ஊழியர்கள் அடித்து கொன்று சாலையின் ஓரமாக போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகிலே வனப்பகுதி உள்ள நிலையில், பாம்பை கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி அருகே அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் அருகே அவ்வப்போது யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஆளுனர், அமைச்சர் பங்கேற்பதால், பல்கலைக்கழக நுழைவாயிலில் ஊழியர்கள் பலர் வழக்கத்தை விட அதிகமாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக நுழைவாயில் அருகே 3 அடி உயரமுள்ள கட்டுவிரியன் பாம்பு தென்பட்டுள்ளது. உடனே, அங்கு பணியிலிருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் பாம்பை அடித்து கொன்று, எதிரே உள்ள சாலையின் ஓரத்தில் பாம்பை வீசினர். வனப்பகுதி அருகிலே உள்ள நிலையில், அவசர கதியில் பாம்பை கொலை வேண்டிய அவசியம் ஏன் என்றும், கொலை செய்யாமல் சிறிய பாம்பு என்பதால் அருகில் காட்டுப்பகுதியில் விட்டிருக்கலாம் என்ற கேள்வி உள்ளது. ஆளுநர் வரும் நேரம் என்றால், அவசரமாக யாரையும் அழைக்காமல் நடந்த இந்நிகழ்வு கண்டனத்தை எழுப்பியுள்ளது.