January 14, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மாங்கரை கணவாய் தடாகம் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் வனப்பகுதியில் இருந்து உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் நாள்தோறும் யானைகள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று தாய் மற்றும் குட்டி யானை தடாகம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் புகுந்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது. மேலும் வீட்டினுள் சென்ற குட்டியானை அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. அப்போது வீட்டின் உள்ளே இருந்தவர்கள் பாதுகாப்பாக மேலே ஏறியதால் அவர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
தற்போது யானைகளின் வலசை பாதை அதிகரித்துள்ளதால் நாள்தோறும் கிராம பகுதிக்குள் யானைகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், குட்டி மற்றும் தாய் யானை வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ளவர்களை தாக்க முயற்சிப்பதாகவும் வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் வெளியே வரும் யானைகளை அப்படியே வனத்துக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.