March 12, 2018
தண்டோரா குழு
கோவை சூலூர் அருகே கண்டெய்னர் லாரி ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர்.
கோவை சிந்தாமணிப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் பசுபதி(35). கும்பகோணம் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த இவர் சிங்காநல்லூர் பகிதியிலுள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினசரி எல்& டி பைபாஸ் சாலையின் அவினாசி சாலை சந்திப்பு பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி இயக்கி வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல் இவர் அப்பகுதியில் பணியில் இருந்துள்ளார்.இவருக்கு துணையாக அவரது நண்பர் ராஜேஷ் என்பவரும் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று(மார்ச் 12)காலை பணி முடிந்து சிந்தாமணிப்புதூரில் உள்ள தனது வீட்டிற்கு குளித்துவிட்டு வர கிளம்பியுள்ளார்.அப்போது எல்& டி டோல் கேட்டில் சுங்கம் வசூலிக்கும் பணியில் இருந்த சக்திவேல் என்பவரும் பணி முடிந்து ஆம்புலன்சில் லிப்ட் கேட்டு ஏறிவந்துள்ளார்.
மூவரும் ஆம்புலன்சின் முன் பகுதியில் அமர்ந்து வந்துள்ளனர்.இவர்கள் வந்த வாகனம் பைபாஸ் சாலையில் அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேராக மோதியது.இதில் பசுபதி மற்றும் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சக்திவேல் என்பவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.