December 27, 2019
தண்டோரா குழு
கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு ஒரு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அதன்பின்னர் பலமணி தேடியபின்னர் மறுநாள் காலையில் வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று உடலை வீசிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் இந்த கொடூரத்தை செய்து இருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர்.பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சந்தோஷ்குமார் குற்றவாளி என இன்று காலை சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும், குற்றவாளி சந்தோஷ்குமாரின் தண்டனை குறித்த விவரத்தை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என கோவை நீதிமன்றம் தெரிவித்தது.இந்த நிலையில், குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு ஒரு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மாதர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து நீதிமன்றத்தில் கோஷம் எழுப்பியதோடு, தடயவியல் அறிக்கையில் மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ கலப்பு இருப்பதாக வெளியான தகவல் குறித்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.