April 5, 2020
தண்டோரா குழு
காய்ச்சல், சளி குறித்த கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள், கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவை மாநகராட்சி முழுவதும் அனைத்து வீட்டுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை, அங்கன்வாடி மையம் ஊழியர்கள் உள்ளிட்டோர் சென்று காய்ச்சல் மற்றும் சளி உள்ளதா? என்ற பரிசோதனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோவை கரும்புக்கடை அருகே 3 பெண் சுகாதார துறை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பிற்கு சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் இஸ்மாயில் என்பவர் பெண் ஊழியர்களை அவதூறாக பேசி, அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டி உள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சங்கீதா என்பவர் போத்தனூர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் இஸ்மாயில் என்பவரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், நோயை பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.