December 23, 2019
கோவையைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவர், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து தற்போது வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கோவையை சேர்ந்த நாகர்ஜூனா என்ற 21 வயதான கல்லூரி மாணவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையோடு நாகர்ஜூனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது தேர்தல் வாக்குறுதிகளாக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், குப்பை மறுசுழற்சி, உள்ளிட்ட பல்வேறு வளார்ச்சிப் பணிகள் செய்துத் தரப்படும் என வாக்குறுதிகள் அளித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இளம் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.