April 4, 2020
தண்டோரா குழு
கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா கண்காணிப்பில் இருந்து ஓடிய சிறுவன் மீட்கப்பட்டு,மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை அன்னூரை சேர்ந்த 17 வயது சிறுவன் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு, அறிக்கையில் நெகட்டீவ் என வந்தபோதும், தொடர் கொரோனா கண்காணிப்பில் கையில் முத்திரை குத்தப்பட்டு ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அந்த சிறுவன் வெளியேறிவிட்டார்.இச்சம்பவம் குறித்து இருப்பிட நிர்வாக மருத்துவ அதிகாரிகள் தகவல் அளிக்கப்பட்டு, அங்குள்ள செவிலியர்கள் அந்த சிறுவனை காணாமல் மருத்துவமனை முழுவதும் தேடினர். அங்கு இல்லாததை உறுதி செய்த பின்பு சிங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சிங்காநல்லூர் ஆய்வாளர் மற்றும் போலீசார் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை அந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக, சாலையில் நின்றிருந்தபோது பிடிபட்டார். அந்த சிறுவனை அறிவுரை கூறி, சிங்காநல்லூர் போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர்.