April 27, 2019 தண்டோரா குழு
கோவை மாவட்டம் செம்புக்கரைபழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, மீண்டும் வீடு ஒன்றை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவையை மாவட்டம் ஆனைகட்டியை அடுத்த செம்புக்கரை பழங்குடியின கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த காட்டு யானை, சி. வெள்ளிங்கிரி என்பவரின் வீட்டில் உணவு ஏதேனும் கிடைக்குமா..? என சோதனையிட்டது. அப்போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
ஆனைகட்டி அருகே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானையினால், வீடு சேதமடைவது இது 2-வது முறையாகும்.
வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.