June 19, 2019
தண்டோரா குழு
கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மே மாதம் 14-ம் தேதி கோவை – அவிநாசி சாலையின் பரபரப்பான பகுதியில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்த கணபதியைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகிய இரண்டு பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்காக பழிக்குப் பழி வாங்குவதற்கான செயல்களில் ஈடுபட இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த பந்தயசாலை போலீசார், இரு தரப்பினரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, தனபால், சஞ்சய் ஆகியோரை தவிர்த்து மணிகண்டன், சதீஷ்குமார், சூர்யா, ஜெகதீஷ், ராஜேஷ், ஹரி, ஹரிஹரன் மற்றும் தனபால் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், பட்டப்பகலில் பொதுமக்களை பீதியடையச் செய்து நடுரோட்டில் அரிவாளால் வெட்டிய குற்ற செயலுக்காகவும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இக்கொடூரமான குற்ற செயலை தொடர்ந்து செய்வதை தடுக்கும் நோக்கத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், 8 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.