May 22, 2021
தண்டோரா குழு
கோவையில் கருப்புப் பூஜை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் தாக்கமே குறையாத நிலையில் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்நோய் தொற்று அதிகளவில் உள்ளது. வட மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்ட கருப்புப் பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நோய்த்தொற்றினால் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதனை அறிவிக்கை செய்யப்பட்ட நோய்த் தொற்றாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுப் போலவே இதுவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கே இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. அதிலும் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சர்க்கரை கரோனா நோய் தொற்றின் போது அதிகளவு ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்களுக்கும் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சைனஸ், தலைவலி, கண் சிவத்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது கண், ரத்த நாளங்கள், மூளை ஆகியவற்றை பாதித்து இறுதியில் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கோவையிலும் 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 6 பேரையும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று தொடர்பாக கண்காணிக்க அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 6 பேர் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இநோய் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.