June 22, 2021
தண்டோரா குழு
கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்புகள் மற்றும் மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் தொழில் துறையினர், தொழிலாளர்கள் மற்றும் நிறுவன பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் இரு இடங்களில் நடைபெற்றது.
18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் மண்டபம் மற்றும் ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ-இந்தியா வளாகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற்றது.காலை முதல் மாலை வரை மொத்தமாக 4 ஆயிரத்து 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து கொடிசியா தலைவர் வி.எம்.ரமேஷ்பாபு கூறுகையில்,
‘‘இரு இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 3,600 முதல் 3,800 தடுப்பூசிகள் வரை மட்டுமே தொடக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகமானோர் ஆர்வத்துடன் வந்ததால்,பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு பெற்று 4 ஆயிரத்து 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொடிசியா சார்பில் மட்டும் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ள தொழில் துறையினர், தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் அனைவருக்கும் உடனடியாக செலுத்த முடியவில்லை.தொழில் துறையினர், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அதிக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளோம்’’ என்றார்.