August 29, 2019 தண்டோரா குழு
கோவை துடியலூரை அடுத்த இடிகரை பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 2.5 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ கலப்பட தேயிலையை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை துடியலூரை அடுத்த இடிகரை பகுதியில் உள்ள டீ கடைகளில் கலப்பட தேயிலை பயன்படுத்தி டீ விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை இடிகரை பகுதியில் உள்ள டீ கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு டீ கடையில் கலப்பட தேயிலை பயன்படுத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது. அக்கடைக்காரரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவர் கலப்பட தேயிலையை விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறையினர் வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் மேல் மாடியில் குடோன் போல் பயன்படுத்தி இரசாயணம் கலந்த தேயிலை தூள்களை நல்ல தேயிலை தூள்களில் கலந்து பாக்கெட் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அங்கிருந்த தேயிலை தூள்களை ஆய்வு செய்தபோது அவைகள் கலப்பட தேயிலை தூள்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்து சுமார் 2.5 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ கலப்பட தேயிலைத் தூள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் இரசாயண பொடிகளையும் பறிமுதல் செய்தனர். இவைகளை எங்கிருந்து இவர் வாங்கி கலப்படம் செய்து விற்பனை செய்து வருகிறார் என்பது குறித்து அவரிடம் உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உணவு பாதுக்காப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறும்போது,
கலப்பட தேயிலை தூள் கலந்த டீயினை பொதுமக்கள் பருகுவதால் குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதாக அறிந்தால் உடனடியாக 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.