January 2, 2020
கோவையில் 120 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டெடுத்தனர்.
கோவை அடுத்த கீரணத்தம், ராயர் கோவில் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது மாட்டை மேய்சலுக்காக வீட்டிலிருந்து வெளியே கட்டி வைத்துள்ளார். அப்போது தெருவில் இருந்த நாய், மாட்டை துரத்தியதாக தெரிகிறது.வேகமாக ஒடிய மாடு பக்கத்து தோட்டத்தில் உள்ள 120 அடி கிணற்றில் விழுந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கணபதி பகுதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி மாட்டை மீட்க போராட்டினர். அப்போது மாடு பயத்தில் மிரண்டதால் வெளியே எடுக்க முடியாமல் சிரமத்திற்குள்ளானது.
இதை தொடர்ந்து கிரைன் வரவழைத்து மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.