December 31, 2018 தண்டோரா குழு
சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி விவசாயிகள் சின்ன வெங்காயத்தை ஒரு கிலோ ஒரு ரூபாய் மற்றும் ஒரு கிலோ இலவசம் என்று கூறியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விற்பனை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது . தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் , சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் குறைந்து உள்ளது. இந்நிலையில் தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்ன வெங்காயத்தை ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும், ஒரு கிலோ வாங்கினால் ஒரு கிலோ இலவசம் என்றபடி ஆட்சியர் அலுவலகம் முன்பு விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர். வெங்காயத்தை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டால் யாருக்கும் பலனில்லாமல் போகும் என்பதால் , விளைவித்த வெங்காயத்தை பொதுமக்கள் பயன்படுத்தட்டும் என்ற நோக்கில் விற்பனை செய்யப்பட்டதாக கூறினர். இதனையடுத்து விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.