March 16, 2020
கோவையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய தனியார் வணிக வளாகங்கள் மற்றும் ஆரம்ப பள்ளிகள் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகள் வரும் 31 ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் துவக்கப் பள்ளிகள், வருகிற 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும்
எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்) வருகிற 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து கோவையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியபடி காணப்படுகிறது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாக புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தின் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கேரள எல்லையோர பகுதிகளில் உள்ள சி சென்டர் திரையரங்குகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.