March 3, 2021
தண்டோரா குழு
கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் தேரோட்டம், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவையில் உள்ள கோனியம்மன் கோவில் கோவையின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதல் மற்றும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கோனியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேரானது ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைகிறது.
இந்த தேர் திருவிழாவின் போது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமிய மக்கள் தேர் விழாவை காண வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.