August 23, 2018
தண்டோரா குழு
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மது அருந்திவிட்டு வந்த நபரை குத்திக்கொலை செய்த இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் மற்றொரு பகுதியிலும் இதேபோன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் பாபு.வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று இரவு கோவை விமான நிலையம் பின்புறமாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் தனது நண்பர் நெல்சன் உடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.அப்போது மதுபானக் கடையில் இருந்து சிறிது தூரத்தில் அவ்விருவரையும் வழிமறித்த இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் வைத்திருக்கக்கூடிய பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர்கள் பணம் கொடுக்காததால் திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தியை கொண்டு பாபுவின் முதுகில் பலமாக குத்தியுள்ளனர்.தடுக்க முயன்ற நெல்சனையும் தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.இதையடுத்து நெல்சன் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் காயமடைந்த நெல்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக கோவை சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்த மிதுன் என்ற வாலிபர் நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்ற போது இதே போன்ற இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.வாலிபர் தப்பி ஓட முயற்சித்த போது அவரை தாக்கி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகவும் பீளமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே குழுவினரால் நிகழ்த்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.