September 1, 2025
தண்டோரா குழு
பேபி.ஓவியா வயது 8 இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நம்பகவுண்டனூர் ஸ்ரீரங்ககவுண்டனூரில் அவரது தந்தை ரவி தாய் செல்வநாயகி அவர்களுடன் வசித்துவந்தார்.
இவர் கடந்த 29.08.2025ஆம் தேதி காலை11மணி அளவில் அவர் சின்னக்காம்பட்டி அருகில் விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு.பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 31.08.2025-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்
மகள் பேபி.ஓவியா அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது சிறுநீரகங்கள்,கல்லீரல்,கண்கள், இரைப்பை,கணையம், சிறுகுடல்,தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது.ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், ஒரு சீறுநீரகம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரைப்பை, கணையம், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில்,
மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய பேபி.ஓவியா குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.