June 8, 2021
தண்டோரா குழு
கோவையில் முதன் முறையாக காரில் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்தும் முகாமை பிக்கி புளோ அமைப்பு
நடத்தியது.
உலகில் கொரனோ வைரஸ் தொற்று நோய் துவங்கிய நாள் முதல், மனித நேயமிக்க நல்ல பல நிறுவனங்கள், தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வழங்குதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள், முக கவசங்கள், கிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள், இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்றவைகளை அயராது வழங்கி வருகின்றன.
நம் நாடு முழுவதிலும், மனித குலத்தையே மிரட்டும் இந்த கொடிய நோயை விரட்ட ஒவ்வொரு மாநிலங்களும் போராடி வருகின்றன. உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் சவாலை வெல்ல போராட்டம் தொடர்ந்து வருகிறது. முன்னணி பணியாளர்கள் மட்டுமின்றி, பல சமூக தொண்டாற்றி வருவோர், பொதுமக்களில் பலர் மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தெருவோரங்களில் இருப்போருக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கும் உதவி வருகின்றனர். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒருவருக்கு உதவி செய்யலாம்.ஆனால், நெருக்கடியான சமயத்தில் யார் உதவுகிறார்களோ அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கோவையில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேசனுடன் இணைந்து,டிரைவ் த்ரு வேக்சின் எனப்படும், காரிலேயே அமர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக செயல்படுத்தியது பிக்கி புளோ. இதன் கோவை கிளையின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ரிடிஷா நிவேதா இந்த பணியை ஒருங்கிணைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஏற்கனவே இணைய தள படிவத்தில் முன்பதிவு செய்துள்ளோருக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கார்களில் முன்று வரிசையாக நிறுத்தப்பட்டு,தடுப்பூசி சமுக இடைவெளி விதியை பின்பற்றி செலுத்தப்பட்டது. கார்களில் இதற்கென தனி அடையாளமிடப்பட்டு, இ. பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு உதவ உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்,” என்றார்.
காரில் இருந்தவாறே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இந்த முறையால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. முதியோர், மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க முடியாதவர்களாக உள்ளனர். மக்கள் அதிகம் உள்ள இடங்களில் வீல் சேர்களிலும் செல்ல முடிவதில்லை. இவர்களின் வசதிக்காக இது உருவாக்கப்பட்டு உதவி செய்யப்பட்டது.
இது குறித்து முதியவர் ஒருவர் கூறுகையில்,
“இது மிகவும் பயனுள்ள முயற்சி. பிரச்னைகளில் உள்ளோருக்கு இது குறித்து கூறுவோம்,” என்றார். இந்த முயற்சிக்கு உதவியவர்களுக்கு மிகவும் நன்றி என்றார்.
மேலும் கோவை பிக்கி புளோ உறுப்பினர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 25 லட்சம் மதிப்பிலான நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் ஜெனரேட்டரை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இந்த டிரைவ் இன் தடுப்பூசியானது, புளோ மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர், குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு வருவோர், கையில்லா சட்டை, முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
தடுப்பூசி செலுத்துவதற்கான ஆதார கடிதத்தை போலீசார் அல்லது பாதுகாவலர்கள் கேட்கும்போது காண்பித்தனர். ஒவ்வொருவரும் கார் நிறுத்தப்பகுதியில் 10 – 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பதிவு செய்த மொபைல் எண்ணில் இவர்கள், ஊசி செலுத்தியதற்கான சான்றை பெற முடியும். இந்த முகாமில் 350 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.
இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்கள், ஹார்மோன் மாத்திரை சாப்பிடும் பெண்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு உட்பட்டோருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. தவிர, சமீபத்தில் அறுவை சிகிச்சையில் இருந்தவர்கள், மாத்திரை ஒவ்வாமை உள்ளோர், டயாலிஸிஸ் நோயாளிகள், ரத்த உறையாமல் இருக்க மருந்து சாப்பிடுவோர் போன்றவர்களும் இதில் கவனம் செலுத்தப்பட்டனர். ஒரு மாதத்திற்குள் டிடி ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கும் டாக்டர்களின் ஆலோசனைகளும் பரிசோதனைகளும் வழங்கப்பட்டன.