May 10, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் உள்ள மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் படி கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வர ஏதுவாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்திட உத்திரவிட்டார்.
அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் கொரோனா பரிசோதனை எடுக்கும் மையம் அருகில் உள்ள சென்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இங்கு தொடர்ந்து செயல்பட மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தாமல் அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நிறுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் ஆத்துபாலம் மின் மயானம், போத்தனூர் செட்டிபாளையம் ரோடு மாநகராட்சி மின் மயானம், மேற்கு மண்டலம் சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயானம் ஆகிய மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியம், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஸ்கனகராஜ், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.