March 28, 2018
தண்டோரா குழு
கோவையில் போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் செய்கை மொழியில் நடத்திய விழிப்புணர்வு சாலை நாடகம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது.இதனால் தமிழகத்தில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் காது கேளாதோர் வாய்பேசாதோர் அமைப்பு காவல்துறையுடன் இணைந்து செய்கை மொழியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை நாடகத்தில் முகமுடி வரைந்திருந்த காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முன்பு நின்று செய்கை மொழியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வு இரண்டாம் கட்டமாக ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகிலும்,மூன்றாவது கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையிலும்,நான்காவது கட்டமாக விமான நிலைய சிக்னலிலும் நடைபெறுகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஊக்கபடுத்தினார்.மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார்,போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு சாலை நாடகம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா கூறுகையில்,
காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அதிக ஆர்வத்துடன் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனத்தை இயக்குவது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது இதனால் ஏற்படும் பின் விளைவுகளை அருமையாக நாடகமாக நடித்து காட்டினர்.இந்த நிகழ்வுகள் கண்டிப்பாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.