December 16, 2019
சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் முதல்வர் உட்பட ஆசிரியைகள் மீது சூலூர் போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கேம் ராம்சிங் கோவை திருச்சி சாலையில் உள்ள சூலூர் விமான தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்கள் அதே பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பும், மற்றொருவர் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்நிலையில், கேம் ராம் சிங்கின் மகன்களை குறும்பு செய்ததாகவும், செல்போன் பயன்படுத்தியதாகவும் கூறி அப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக அடித்து உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அம்மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து அவர்கள் சூலூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து மர்ம உறுப்புகளில் தாக்கி மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சூலூர் போலீசார் பள்ளியின் முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி மற்றும் அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் 7,8-இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்றனர்.பீகார் மாணவர்கள் வகுப்புகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது பொய் புகாரளித்து இருப்பதாகவும் கூறிய மாணவர்கள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே போராட்டத்தின் அழுத்தத்தையடுத்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக, சக மாணவருக்கு எதிராக பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.