August 4, 2019
கோவை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். பிளக்ஸ் அடித்து கழுதைகளுக்கு அலங்காரம் செய்து சீர்வரிசை எடுத்து வந்து மேளதாளம் முழங்க திருமணம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ளது லக்கேபாளையம் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி இன்று சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை ஒட்டி அடிக்கப்பட்ட பிளக்சில் மழையே வருக வருக என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் ஆண் கழுதை மணமகனாகவும் அலங்காரம் செய்யப்பட்டது. பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி, அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நெகச்சாயம் பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவிக்கப்பட்டு மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெற்றது. மேளதாளம் முழங்க கிராம மக்கள் சீர்வரிசைகளை எடுத்து வந்தனர். கோவிலில் பூஜை செய்யப்பட்ட பின்னர், மேளதாளம் முழங்க பெண் கழுதைக்கு தாலி அணிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.