September 21, 2019 தண்டோரா குழு
கோவை அத்திப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்தம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் யோகாவுடன் அளிக்கப்பட்டு வரும் இயற்கை மருத்துவம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
உலக புகழ் பெற்றவரும் பத்மஸ்ரீ விருதாளருமான கோவையை சேர்ந்தவர் யோகா புகழ் நானம்மாள் பாட்டி.யோகாவை உலகமே வியக்கும் வகையில் தனது 100 வயதிலும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தி வரும் இவரது ஐந்தாவது மகன் எல்லுசாமி. யோகா மாஸ்டரான இவர் இயற்கை வைத்தியத்தில் ஆர்வமுடையவர்.
இந்நிலையில் இவர் அண்மையில் கோவையை அடுத்த அத்திபாளையம் பகுதியில் ஆனந்தம் யோகா மற்றும் இயற்கை வைத்திய மையத்தை துவக்கி அதில் முழுவதும் நமது தமிழக பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை யோகாவுடன் சிகிச்சை அளித்து வருகிறார். மூட்டு வலி,முதுகு வலி,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் என பல்வேறு விதமான சிகிச்சைகள் மட்டுமின்றி நீண்டகாலமாக தீர்க்க முடியாத பல்வேறு நோய்களில் அவஸ்தைபடும் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த இயற்கை மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது.இயற்கையான தாவர மூலிகைகள்,நீராவி குளியல்,எண்ணெய் குளியல் உட்பட பல்வேறு விதமான பாரம்பரிய முறை சிகிச்சைகளை அளித்து வருகிறார்.அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இவரது மையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று வருவதோடு வெளிநாட்டினரும் யோகாவோடு இயற்கை சிகிச்சையை விரும்பி செய்து வருகின்றனர்.இவரது மையத்தில் முதுகு தண்டு வடம் மற்றும் கால்வலிக்கு சிகிச்சை பெற வந்த கோவை துடியலூரை சேர்ந்த தண்டாயுதம் என்ற 72 வயது முதியவர் தான் யோகாவுடன் கூடிய இயற்கை சிகிச்சை முறையில் நன்றாக குணமடைந்ததால் யோகா மற்றும் இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக யோகா பயில்வதாக கூறும் அவர்,சில ஆசனங்களையும் செய்து காண்பித்து வியப்பில் ஆழ்த்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் யோகா தெரபிஸ்ட் மற்றும் இயற்கை வைத்திய நிபுணர் எல்லுசாமி பேசுகையில்,
அழிந்து வரும் நமது பாரம்பரிய இயற்கை சிகிச்சை முறையை பாதுகாக்கும் விதமாக தான் இதனை செய்து வருவதாகவும்,யோகாவுடன் சேர்த்து செய்யும் இந்த இயற்கை மருத்துவம் ஆக்கபூர்வமாக, மனிதனின் உடல் நலம், மன நலம், கட்டுபாடு, உணர்வு, ஆன்மீகம், ஆகியவற்றினை இயற்கையுடன் ஒன்றிணைத்து நோயை குணமாக்ககூடிய முறையாகும் என தெரிவித்தார். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்த பின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்திடும்.
இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் வலிமை இந்த இயற்கை சிகிச்சை முறையில் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.