February 4, 2021 தண்டோரா குழு
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த இலவச தொலைபேசி அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாடு யூனியன் ஒவ்வொரு பிப்ரவரி 4 ம் தேதியை உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கிறது.இதில் உலக அளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வியை மேம்படுத்தவும், தனிநபரை ஊக்கப்படுத்தவும்,அரசுடன் இணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அந்த வகையில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் பேசியபோது, நமது நேர்மறையான செயல்பாடுகளால் வரும் 2030ம் ஆண்டுக்குள் ஆரம்ப கால புற்றுநோய் மற்றும் தொற்று இல்லா நோய்களால் இறப்போரின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும் என்றார்.
மேலும்,உலக புற்றுநோய் தினத்தை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது என தெரிவித்தார். இந்த ஆண்டு 2021 ல், ஒருவர், இலவச தொலைபேசி அழைப்புக்கு ஒரு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் போதும், தினமும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை குரல் ஒலி வடிவிலும், குறுஞ்செய்தியாகவும் பெறலாம். ஒவ்வொரு நாளும் பல்வேறு தகவல்களை, புற்றுநோயின் பல்வேறு வகைகள், அதன் பாதிப்பு/ அறிகுறிகள், முன் கூட்டி அறியும் பரிசோதனைகள்,முன்கூட்டியே அறிவதன் பயன்கள், சிகிச்சை முறைகள் மற்றும் பல விபரங்களை மொபைல் போனில் குறுஞ்செய்தியாக பெறலாம் எனவும் இரண்டு மொழிகளில் இந்த வசதியை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்,
ஆங்கிலத்திற்கு இலவச அழைப்பு எண்ணாக 18005472800 ஐயும், தமிழில் பெற 18005475900 என்ற எண்ணையும் அழைக்கலாம் எனவும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு விரைப்பை புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இந்த இலவச தொலைபேசி துவக்க விழாவை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன், மருத்துவமனையின் டீன் சுகுமாறன், தலைமை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.