December 16, 2019
தண்டோரா குழு
சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியினர் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சன் ஆகியோர் இன்று கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடினர்.
தமிழகத்தை சேர்ந்த கால்பந்து அணியான ‘சென்னையின் எஃப்.சி’ மற்றும் அந்த அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சன் ஆகியோர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி இன்று அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை எஃப்.சி அணியின் கால்பந்து வீரர்கள் எட்வின் சிட்னி வன்ஸ்பவுல், அனிருத் தபா, மசிஹ் சைகானி,ஆன்ரீ ஸ்கிம்பரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ் ஆகியோர் கால்பந்து வீரர்கள் மற்றும் நடிகர் அபிஷேக் பட்சனுக்கு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மாணவர்களிடையே அபிஷேக் பட்சன் பேசுகையில்,
“இந்த கால்பந்து அணியின் பெயர் தான் சென்னை எஃப்.சி ஆனால் இது ஒரு தமிழக அணி. இந்த அணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிப்பருவம் என்பது ஒரு வரம். இந்த பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் மதித்து நடக்க வேண்டும்.” என்றார்.