June 11, 2018
தண்டோரா குழு
கோவையில் பத்திரிகையாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம்
புதிய தலைமுறை நிருபர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி கோவையில் பத்திரிகையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி வந்த பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் நவ இந்தியா அருகே உள்ள தனியார் மண்டபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி கடந்த 8 ஆம தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான அமீர் கோவையில் நடந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவரை பேசவிடாமல் இடைமறித்த ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனம் மீதும் அதன் செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குபதிவு இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரானது, கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் காவல் துறையினர் போட்ட பொய் வழக்கை திரும்பபெறக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் நூழைவாயில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையை கண்டித்தும், வழக்கை திரும்பபெறக்கோரி கோசங்களை எழுப்பியவர்கள் மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் காவல் துறை போட்ட பொய் வழக்கை திரும்பபெற வலியுறுத்தி தமிழக முதலமைச்சரிடம் பேச கோரிக்கை விடுத்தனர்.