March 27, 2019 தண்டோரா குழு
கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவையை பொறுத்தவரையில் அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பல்வேறு வேட்பாளர்கள் 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையை நடத்தி, வேட்பாளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொது தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டியது மற்றும் குறைபாடுகள் குறித்து எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டு காலஅவகாசமும் வழங்கப்பட்டது. தெளிவான ஆய்வுக்குப் பின்னரே வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 15 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அதைபோல் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் 41 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தகுதியின் அடிப்படையில் 17 பேருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொள்ளாச்சியில் ஒரு வழக்கும், கோவையில் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிகழ்விற்கு முன் அனுமதி இல்லாமல் இடம் அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இதுவரை 2 கோடி அளவிற்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் 50 லட்சம் அளவிற்கு ஆவணங்களை காட்டப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.