February 2, 2018
தண்டோரா குழு
கோவையில் நகர்ப்புற நீர்நிலைகளின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நகர்ப்புற நீர்நிலைகளின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக அறிவிக்கப்பட்ட கோவை நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமான சிங்காநல்லூர் குளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சர்வதேச நீர்நிலைகள் தினத்தை முன்னிட்டு இந்தாண்டு தலைப்பிலான நகர்ப்புற நீர்நிலைகள் பற்றியும், அதனை மேம்படுத்துவது, பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை நகரின் மையத்தில் சுமார் 282 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிங்காநல்லூர் குளத்தை முன்னுதாரணமாக காண்பிக்கப்பட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், அங்கு நடைபெற்று வரும் மியோவாக்கி முறையிலான மரம் நடுவது, பல்லுயிர்களை பாதுகாப்பது குறித்த பணிகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சைக்கிள் பேரணி மற்றும் சுமார் 500 மரம் நடுவது ஆகிய பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். வளர்ந்து வரும் நகர்ப்புற சூழலில் நீர்நிலைகளை பாதுகாப்பதை மட்டுமின்றி, கூடுதலான நீர்நிலைகளை உருவாக்கும் கட்டாயத்தில் உள்ளதாகவும், இதில், பிளாஸ்டிக் உள்ளிட்ட பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் அரசுடன் பொதுமக்களின் பங்களிப்பு மட்டுமே இதை சாத்தியப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில், உதவி ஆட்சியர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் சதீஷ், போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.