December 28, 2018 தண்டோரா குழு
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்த உள்ள மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தொலைக்காட்சி பெட்டிகளை சுமந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைபடுத்த உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவி புதிய கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த திங்களன்று 300க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி ( தமிழகம்) நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலையில் அக்கட்சியினர் தொலைக்காட்சி பெட்டிகளை சுமந்தும் தரையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 500 ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என்பதால் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து அர்ஜூன் சம்பத் கூறுகையில்,
ஆரம்பத்தில் இலவச சேனல்கள் வழங்கிய தனியார் நிறுவனங்கள் தற்போது கட்டண சேனல்களாக மாற்றம் செய்து வருகிறது. இவர்கள் விளம்பரம் மூலம் வருமானம் அதிக அளவில் பெற்று வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில் 70 ரூபாய்க்கு அனைத்து சேனல்களையும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர் வரும் காலங்களில் செட் அப் பாக்ஸ் அல்லது டிஜிட்டல் முறை மூலம் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் அரசு கேபிள் மூலமே அனைத்து சேனல்கள் மக்கள் பார்க்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷ்ங்களை எழுப்பினர்.