March 7, 2019 தண்டோரா குழு
கோவையில் பிறந்த சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் இருந்த பெண் குழந்தை கோவில் பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே சரவணாநகர் பகுதியில் உள்ள கோவை திருப்பதி கோவிலின் அருகே மாட்டுப்பபண்ணை வைத்திருப்பவர்கள் சிவராமசந்திரன் மற்றும் அமுல் தம்பதியினர். இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலினுள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது அங்கு மாட்டு சாணம் எடுத்துக்கொண்டிருந்த அமுல் அங்கு சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாமல் ரத்தத்துடன் பெண் குழந்தை ஒன்று மண்ணில் வீசப்பட்டு கிடந்துள்ளது. குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தம்பதியினர் உடனே குழந்தையை எடுத்து துடைத்து பால் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து,100க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தையை துடியலுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் தொப்புள் கொடியை அறுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து குழந்தையை கோவை அரசு மருத்துவ மனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி மூலம் குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தையினை கோவிலில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.