April 17, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்,குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் வீடுகள் மற்றும் தனிமைபடுத்த பட்டவர்களின் வீடுகளில் உள்ள குப்பைகளை,சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57,58,64 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக பாதுகாப்பு கவச உடையை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம் மற்றும் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மாநில குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் வழங்கினர்.தொடர்ந்து அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் விக்டர் மற்றும் முதல்வர் மெர்சி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது.