February 29, 2020
தண்டோரா குழு
கோவையில் திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்த இளைஞரை போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
கோவையை அடுத்த கீரணத்தம் கல்லுகுழி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராமாத்தாள். இவர்களுக்கு நந்தினி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.நந்தினி கோவை அரசு கலைக்கல்லூரியல் இறுதியாண்டு படித்து வந்தார். இதற்கிடையில்,நந்தினியும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நந்தினியின் தாய் ராமாத்தாள் இருவரின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் நந்தினியின் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் என கூறியருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தினேஷின் நடவடிக்கையில சந்தேகம் அடைந்த நந்தினி பேச மறுத்ததுடன் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரத்திலிருந்த தினேஷ் நேற்று மாலை நந்தினியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து நந்தினியை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் நந்தினியின் கழுத்தை நெரித்ததுடன் அவரது வாயில் சாணிப்பவுடர் என்னும் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பினார். வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், நந்தினி தரையில் உடலில் காயங்களுடன் மயக்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நந்தினி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தப்பி ஓடிய தினேஷ் அவரது பாட்டி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தினேஷுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோவில்பாளையம் போலீசார் தினேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.