April 11, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்றிரவு இந்து முன்னணி உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ராமகிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
இது குறித்து பேசிய வானதி சீனிவாசன்,
நேற்று நடந்த சம்பவத்தை போலவே சில நாட்களுக்கு முன் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும். தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் மீது தாக்குதல் நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை தடுப்பதற்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.