May 25, 2018
தண்டோரா குழு
கோவையில் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் பள்ளிகளில் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட துணை ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான குழு ஆய்வு செய்தனர்.
கோவை தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – ன் படி காலியாக உள்ள 25 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தவருக்கு உரிய இடங்கள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என இரண்டாவது நாளாக ஆய்வு நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துணை ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக்குலேசன் ஆய்வாளர், மாவட்ட ஆதிதிராவிட குழு உறுப்பினர்களை கொண்ட கமிட்டி இரண்டாவது நாளாக இன்று தடாகம் சாலையிலுள்ள அவிலா மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் பாரதி மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.
இதில் மறுக்கப்பட்ட சமூகத்தினரான, துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள்,மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு உரிய இடம் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்,கோவை மாவட்டத்தில் 206 பள்ளிகள் இருக்கின்றன.இதில் பட்டியல் இனத்தவருக்கு குறைவான இடங்களை வழங்கிய 45 பள்ளிகளில் ஆய்வு நடைபெற இருப்பதாக தெரிவித்தனர்.+1 வகுப்பில் மதிப்பெண் இருந்தும் பட்டியல் இன மாணவ மாணவிகள் கேட்கும் பாடங்களை தனியார் பள்ளி நிர்வாகம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது கடந்த இரு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட பட்டியல் இன மாணவ, மாணவிகளுக்கு +1 வகுப்பில் அவர்கள் கேட்ட பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த சோதனை தொடரும் என இக்குழுவினர் தெரிவித்தனர்.