July 28, 2021
தண்டோரா குழு
கோவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக வணிக சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
உணவுப் பாதுகாப்பு தர சட்டத்தின்படி புகையிலைப் பொருள்களான பான்மசாலா, குட்கா, நிகோடின் கொண்ட பொருள்கள் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், விநியோகம் செய்தல், தயாரித்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் சட்டப்படி குற்றமாகும்.
புகையிலைப் பொருள்களை கடத்துபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல், விநியோகம் செய்தல், சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் தொடா்பாக 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகையிலை, பான்மசாலா, குட்கா பொருட்களை விற்பனை செய்வது தண்டனைக்குறிய குற்றம் என்பதை உணா்ந்து வணிகா்கள் வியாபாரம் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் திடீா் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக,புகையிலைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் வணிக சங்கப் பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.இதில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன், மாநகர நகா்நல அலுவலா் ராஜா, மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.