January 8, 2020 தண்டோரா குழு
கோவையில் டிரெடிங் நிறுவனம் நடத்தி முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, பல இலட்ச ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் ஒஎல்எக்ஸ் லிப்ரா இண்டர்நேசனல் டிரெடிங் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி ஏராளமானோர் பல இலட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் உறுதியளித்தபடி பணத்தை திருப்பிதராமல் அந்நிறுவனத்தினர் இழுத்தடித்துள்ளனர்.
இதுதொடர்பாக போத்தனூர் பகுதியை சேர்ந்த தில்லைக்கரசன் என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நிறுவன உரிமையாளர் போனி தாமஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த போனி தாமசை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர்.