November 23, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே காளை மாட்டுடன் குட்டையில் இறங்கி டிக்டாக் செய்த இளைஞர் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராயர்பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோர் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது நண்பரான விக்னேஸ்வரன் அவர் வளர்த்து வரும் காளை மாடுகளை வைத்து டிக் டாக் செய்வதில் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக நண்பர்கள் நால்வரும் கடந்த புதன்கிழமை வடுகபாளையத்திலுள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர். டிக் டாக் மோகத்தில் குட்டையில் மாட்டின் மீது ஏறி குதித்து மூவரும் “டிக் டாக்” வீடியோ எடுத்து விளையாடியுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வந்தவர்களுக்கு மறுநாளும் அதேபோல் டிக் டாக் வீடியோ எடுக்க ஆவல் ஏற்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை மீண்டும் அந்தக் குட்டைக்குச் சென்றவர்கள், முந்தைய நாளைப் போன்றே மாட்டின் மீது ஏறி குதித்தும், அதனை நீரில் அமிழ்த்தியும் விளையாடியபடி டிக் டாக் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மிரண்டு போய் இங்கும் அங்கும் ஓடிய காளை மாடு, ஒரு கட்டத்தில் ஆழமான பகுதிக்கு விக்னேஸ்வரனை இழுத்துச் சென்றுள்ளது. நீச்சல் தெரியாமல் தத்தளித்த அவரை மற்ற மூவரும் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விக்னேஸ்வரன் உடலை மீட்டனர்.
நீர்நிலைகளுக்கு அருகே நின்று செல்பி எடுப்பது, டிக் டாக் வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களால் பேராபத்து நேரும் என தொடர்ந்து அரசும் தன்னார்வ அமைப்புகளும் எச்சரிக்கை செய்து வருகின்றன. அவற்றுக்கு உதாரணமாக பல சம்பவங்களும் அண்மைக்காலங்களில் அரங்கேறியுள்ளன. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியதே.