January 4, 2020
தண்டோரா குழு
கோபால்சாமி துரைசாமி நாயுடு நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மற்றுமொரு ஜிடி நாயுடு நினைவு கலையகம் இன்று பொதுமக்கள் பார்வைக்காக துவங்கப்பட்டுள்ளது.
கோவையில் கட்டட கலை மற்றும் நவீன தொழில்களின் முன்னோடியாக கருதப்படும் ஜிடி நாயுடு, அவரது வாழ்நாளில் பொறியியல் துறையில் ஈடு இணையற்ற சாதனைகளை நிகழ்த்தியவர். அவருக்கு பின் விட்டுச் சென்ற மரபுகளை நாம் தொடர்ந்து வருகிறோம். இந்தியாவில் முதல் முறையாக மின்மோட்டரை உற்பத்தி செய்த பெருமை இவரையே சாரும். ‘இந்தியாவின் எடிசன்’ கோவையின் வளத்துக்கு பாடுபட்ட இவரது கண்டுபிடிப்புகள், கோவையில் உள்ள தொழில்களுக்கு அவர் அளித்த பங்குகளை எடுத்துக் காட்டும் விதமாக பல்வேறு அருங்காட்சியகங்கள் உள்ளன.
இந்நிலையில், ஜி.டி அறிவியல் அருங்காட்சியத்தில் அமைந்துள்ள ஜி.டி நாயுடு நினைவு கலைக்கூடத்தை கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். புதிய கலையகத்தின் திறப்பு விழாவின் கௌரவ விருந்தினராக இந்தியா டுடே குழுமத்தின் குழும ஆசிரியர் குழு இயக்குனர் (வெளியிடுதல்) ராஜ் செங்கப்பா பங்கேற்றார். பங்கேற்ற விருந்தினர்கள், ‘இது போன்ற அருங்காட்சியகங்களையும் கலைக் கூடங்களையும் அமைப்பது, சாதனையாளர்களுக்கு நாம் செய்யும் கவுரவம்’ என்பதை விளக்கி பேசினர்கள்.
நிகழ்ச்சியில்,‘ஜி.டி நாயுடு – இந்தியாவின் எடிசன்’ என்ற அவரது வாழ்க்கை குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இதில் அவரது கூர்மையான அறிவும், அசாதாரண வாழ்க்கையும், அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஊக்குவிப்பும் இடம் பெற்றிருந்தது. இந்திய திரைப்பட பிரிவு தயாரித்த இந்த படம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வகiயில் 2019ம் ஆண்டுக்கான, ’சிறந்த தனிச்சிறப்பு மிக்க படத்துக்கான (‘ Best Non-feature Film) தேசிய விருதை பெற்றுள்ளது.
ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் மேலாண்மை செய்யப்பட்டு வரும் இந்த நினைவு அருங்காட்சியகங்களில்,ஜிடி நாயுடு கண்டுபிடித்த பஸ் போக்குவரத்து,வானொலி தொழில்நுட்பம், இயந்திர கருவிகள்,வீட்டு உபயோக பொருட்கள், வேளாண்மை,சித்தா போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன.அவரது வாழ்க்கை வரலாறும் வரிசைப்படி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முறையான கல்வி பயிலாமல் இத்தகைய சாதனைகளை ஏற்படுத்திய அவரது வாழ்க்கை பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது. கல்வியிலும், தொழிலிலும் அவரது ஈடுபாடு, கோவையின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு காரணமாகவும் இது அமைந்தது.
ஜிடிநாயுடு அவர்களின் இளமை கால வாழ்க்கையில் அவரது ஐரோப்பிய நாடுகளின் பயணம், வருமான வரித்துறையுடன் இருந்த இணக்கம், வேலை வாய்ப்பு தரும் தொழில் கல்வி போன்றவைகள் இந்த அருங்காட்சியகத்தில் வரிசைப்படி இடம் பெற்றுள்ளன.
.