July 22, 2025
தண்டோரா குழு
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) – தமிழ் நாடு மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டி.இ.ஏ) ஆகியோர் இணைந்து தமிழக அரசின் ஆதரவுடன் இந்த நிகழ்வை ஜூலை 21ம் தேதி கோவையிலும், 22ம் தேதி திருப்பூரிலும் நடத்துகின்றனர்.
செயற்கை நூலிழை (எம்.எம். எஃப்) சார்ந்த ஜவுளி மற்றும் ஆராய்ச்சியில் தாய்வான் ஒரு முன்னோடி என்பதால் அந்நாட்டை சேர்த்த நிபுணர்கள் இந்த நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை மற்றும் தொழிநுட்ப அமர்வுகளில் உரையாற்றுகின்றனர்.
அதை தொடர்ந்து 22ம் தேதி திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் தைவான் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்.
முதலாவதாக இன்று நடைபெற்ற துவக்க நிகழ்வில், சி.ஐ.ஐ தமிழ்நாடு- வின் ஜவுளி பிரிவின் கன்வினர் கோபி குமார் அனைவரையும் வரவேற்றார்.
அவரைத் தொடர்ந்து திருப்பூரில் ஏற்றுமதியாளர் சங்கத்தின் எம்.எம். எஃப் குழு துணை தலைவர் சுனில் குமார் ஜூன்ஜூன்வாலா; சி.ஐ.ஐ தமிழ்நாடு மாநில குழுவின் துணைத் தலைவர் தேவராஜன்; ஜிண்டெக்ஸ் நிறுவன மூத்த துணை தலைவர் கணேஷ்; தாய்வான் ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்டின் ஹூவாங்; திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் சக்திவேல்; கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்; தமிழக அரசின் கைத்தறி பிரிவு இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் எம்.எம். எஃப் குழு தலைவர் அருண் ராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றின தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை செயலர் அருண் ராய்; இது போன்ற ஒரு முக்கியமான ஜவுளித்துறை மாநாட்டை ஒருங்கிணைத்ததற்காக, சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை பாராட்டினார். இந்த மாநாட்டின் மூலமாக ஒரு சிறந்த வர்த்தக உறவு தமிழ்நாடு மற்றும் தாய்வான் இடையே உருவாக்கப்படும் என்று தான் நம்புவதாக கூறினார்.
ஜவுளி துறையின் எதிர்காலம் என்பது பருத்தி என்பதை தாண்டி உள்ளது என்பதால் தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் பருத்தியை தாண்டி உள்ள எம்.எம். எஃப். போன்ற பல்வேறு வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
தாய்வான் மற்றும் தமிழ்நாட்டிற்கிடையே பல காலமாக ஒரு நல்ல வர்த்தக உறவு இருந்து வருவதாக குறிப்பிட்ட அவர் எலக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் காலணி துறைகளிலும் நல்ல வர்த்தக உறவுகளை அமைத்துக் கொண்டது போல தாய்வானும் தமிழ்நாடும் ஜவுளி துறையிலும் ஒரு சிறந்த நிலையை அடைய எடுத்துள்ள முயற்சி வியக்க வைப்பதாக கூறினார்.
தாய்வானும் தமிழ்நாடும் பல்வேறு வழிகளில் ஜவுளி துறையில் கூட்டை அமைத்துக் கொள்ள முடியும் என பேசிய அவர், தமிழகத்தில் வந்து தாய்வான் நாட்டைச் சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் முதலீடு செய்யலாம்; இங்கு அவர்களுடைய சொந்த நிறுவனங்களை அமைக்கலாம்; அல்லது இங்குள்ள நிறுவனங்கள் உடன் இணைந்து கூட்டு நிறுவனங்களை துவக்கலாம்; அவர்கள் பொருட்களை இங்கே விற்க முன்வரலாம், இங்கிருந்து தயாரிப்புகளை வாங்கலாம்; இது போன்ற பல வழிகள் உள்ளது. ஜவுளித்துறை முன்னேற்றத்திற்காக இந்த இரு பகுதிகளும் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தமிழக அரசின் முழு ஆதரவு இருக்கும் என்றார்.
செய்தியாளர் சந்திப்பில் சி.ஐ.ஐ- தமிழ் நாடு மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் பிரதிநிதிகள் பேசுகையில்:-
இன்று மாநாட்டில் நடைபெற்ற தொழில்நுட்ப ரீதியான அமர்வுகளில் ஜவுளி துறையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாய்வான் மற்றும் தமிழ்நாட்டுக்கிடையே 2026ல் ஜவுளித்துறையில் ஒரு நல்ல கூட்டு கண்டிப்பாக அமையும் இன்று கருதுவதாக அவர்கள் கூறினர்.
எம்.எம். எஃப். சார்ந்த ஜவுளி தொழில் முழுவதிலுமே தாய்வானுடனான கூட்டு இருக்கும் என்றாலும் முதலாவதாக தாய்வானில் இருந்து துணியை நமது மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்கள் இறக்குமதி செய்து, அதை ஆடையாக மாற்றி பின்னர் அதை ஏற்றுமதி செய்வது போன்ற வகையில் இந்த கூட்டை ஆரம்பிக்க திட்டம் உள்ளது என்று அவர்கள் கூறினர்.
விளையாட்டுத் துறை தொடர்பான உடைகள் சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் தாய்வான் சிறந்து விளங்குகிறது. துணி துவங்கி தொழில்நுட்பம் வரை இப்பிறவில் அந்நாடு முன்னணி நாடாக உள்ளது.
எனவே இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு இந்த எம்.எம். எஃப். துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள அனைத்து தீர்வுகளையும் அவர்கள் நமக்கு இந்தியாவிலேயே வழங்க உள்ளனர்.
இன்று நடைபெற்ற தொழில்நுட்பம் சார்ந்த அமர்வுகள், ஜவுளித்துறை சார்ந்தவர்களுக்கு செயற்கை நூலிழையை அடிப்படையாகக் கொண்ட ஜவுளி துறையில் உள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய அமர்வுகளாக இருந்தது.
இந்தக் கூட்டு முயற்சியின் துவக்கம் என்பது ஆரம்பத்தில் தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த பரிமாற்றங்களை தாய்வானிடமிருந்து இந்திய ஜவுளித்துறைக்கு வழங்கும். முதற்கட்டமாக துணி மற்றும் நூல் ஆகியவற்றை மேலாண்மை செய்ய அவர்கள் நமக்கு உதவுவார்கள். இது ஆரம்ப நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
ஆனால் தாய்வான் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் இங்கு ஒன்றாக இணைந்து தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்பதே தங்களின் கனவு என்று அவர்கள் கூறினர். அதற்கு இங்கு தொழில் முனைவோர்கள் தயாராக இருப்பது மட்டுமல்லாது இந்த ஜவுளி துறைக்கு (எம்.எம். எஃப்/ செயற்கை நூலிழை) தேவையான முழு சூழல் இங்கு உள்ளது எனவும், இங்கு முதலீடு செய்ய சூழல் சரியாக உள்ளது என்ற நம்பிக்கையும் நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
எப்படி வியட்நாம், இந்தோனேஷியா, போன்ற நாடுகளில் அவர்கள் சென்று, அங்கு அவர்கள் நிறுவனங்களை நிறுவி உள்ளார்களோ அது போல நடக்கவேண்டும் என எதிர்பாக்கிறோம், என்றனர்.
தமிழக அரசு இதற்கு எவ்வாறு உதவ முடியும், என்ற கேள்விக்கு, கடைசி 6 மாதங்களில் இது பற்றி ஆய்வை ஜவுளி துறை பற்றிய ஆழமான புரிதல் உள்ள ஒரு ஆலோசனை நிறுவனம் செய்துள்ளது. அவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடம் பேசி 120 பக்க அறிக்கை உருவாக்கியுள்ளனர். அதில் ஜவுளித்துறைக்கான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும் அதை பரிசீலனை செய்யவுள்ளது என அறிகிறோம். இது விரைவில் வெளிவரும். இந்த அறிக்கையில் சொன்ன மாற்றங்கள் நடைபெற்றால் எப்படிபட்ட வர்த்தக முன்னேற்றம் கிடைக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு இத்துறைக்கு உதவ முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.