January 28, 2022
தண்டோரா குழு
கோவையில் அதிகரித்து வரும் சளி காய்ச்சல் நோய் காரணமாக பொறியியல் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதும் சிறு குறு நடுத்தர தொழில் கூடங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இயங்கிவருகின்றன.இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.குறிப்பாக பொறியியல் உற்பத்தி என்பது கோவையில் அதிகமாக காணப்படுகிறது. அதேபோன்று இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்கள் பற்றாக்குறை, மூலப் பொருள் விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தொழில் சுணக்கமாக காணப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் உற்பத்தி தொழில் கடும் பாதிப்படைந்துள்ளது.
தமிழகத்திலேயே கோவையில் கொரோனா பரவல் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சளி காய்ச்சல் நோய் என்பது அபரிமிதமாக காணப்படுகிறது.ஏற்கனவே தொடர் ஊரடங்கு வருமோ என்ற பயம் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி பயணித்து வரும் உழலில் தற்போது சளி காய்ச்சல் நோயால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோய் கண்டறியப்பட்டதாக கூறும் தொழில் அமைப்பினர் தற்போதும் அதேபோன்று முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.