April 9, 2021
தண்டோரா குழு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளதாக இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனையில் சிறப்பு சர்க்கரை நோய் மையத்தை ஹிந்துஸ்தான் குழுமத்தின் தலைவர் கண்ணையன் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கால் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.இந்த சிறப்பு சிகிச்சை மையத்தின் மூலம் ஒருவர் உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை வழங்கி நோயாளியின் ஆயுளை நீட்டிக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா? சிகிச்சை தேவையா? புதிய மருந்துகள் தேவையா? உள்ளிட்டவற்றை கண்டறிந்து சிகிச்சை வழங்க முடியும்.பிரசவ காலத்தில் பெண்களுக்கு சர்க்கரை நோய் வரலால். அதன்பின் சர்க்கரை நோய் குணமாகும். இருந்த போதிலும் 5 அல்லது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்க்கரை நோய் வரலாம். எனவே பெண்கள் தங்களது பி.எம்.ஐ-ஐ சரியாக வைத்து, உணவு பழக்கத்தை சரியாக வைக்க வேண்டும்.இந்தியா சர்க்கரை நோயின் தலைமையிடமாக மாறி வருகிறது.
கோவையிலும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், மன அழுத்தம், மாவு சத்து அதிகம் எடுப்பது உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான காரணிகளாகும்.இதனை முன்கூட்டியே அறிந்துகொண்டால், கால்களை இழப்பது, கண் பார்வையை இழப்பது உள்ளிட்டவற்றை தடுக்கலாம்.கொரோனா காலத்தில் சர்க்கரை நோய் அதிகமாகிறது.கொரோனா வந்த பிறகு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வைரசானது இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் தாக்கி, அழிக்கிறது. இதனால் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரலாம் என்றார்.