April 13, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்டம்,கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் “ராசி பிரைம் மூவி” என்ற உள்ளூர் சேனலின் நிறுவனர், கடந்த 11.04.2026 அன்று மத்திய தணிக்கை சான்று பெறாமல், நிலுவையில் இருந்து வரும் “ஜனநாயகன்” திரைப்படத்தை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து,தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த கோவை புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகனப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி புகாரை தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன்,உத்தரவின்படி, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், மத்திய தணிக்கை குழுவின் சான்றுக்கு காத்திருக்கும் “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்ட லிங்க் மூலம் “ராசி பிரைம் மூவி” உள்ளூர் சேனலில், பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால்,சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரான
கருமத்தம்பட்டியை சேர்ந்த
பழனிச்சாமி வயது 44 என்பவர் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் வடிவேல் குமாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும்,குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட கம்ப்யூட்டர்,5 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்டத்திற்கு புறம்பாக, மத்திய தணிக்கை குழுவால் அனுமதி அளிக்கப்படாத ஜனநாயகன் படத்தை வெளியிட்ட ராசி டிவி சேனலின் நிறுவன அலுவலகம் அதிகாரப்பூர்வமாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் பிற பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களை சட்டத்திற்கு புறம்பாக பகிர்வு செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை உதவி எண்களுக்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.