April 17, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 2848 பேரிடம் ரத்தம், சளி மாதிரி டெஸ்ட் எடுக்கப்பட்டதாக கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை,மேட்டுப்பாளையம்,மதுக்கரை, மற்றும் கோவை மாநகராட்சி உட்பட உக்கடம், போத்தனூர்,கே.கே.புதூர்,போத்தனூர் ரயில் நிலையம் பகுதி பூ மார்க்கெட்,ஆர்எஸ் புரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் சேரன்மாநகர் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மொத்தம் 127 பேர் உள்ளனர்.
இதன்காரணமாக இப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள வீடுகளில் வீதிகளில் கிருமிநாசினி அளிக்கப்படுகிறது. மேலும் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்காக சிறப்பு மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் உள்ள நபர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கள் மற்றும் வீட்டைச் சுற்றி இருக்கும் நபர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து வருகிறார்கள்.அதன்படி தற்போது வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 848 பேரிடமிருந்து ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.
இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1963 பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உக்கடம், சாரமேடு மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் 300 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்றார்.