April 17, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களால் முயன்ற நிதி உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து,கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் முதுநிலை காவலர் பாபு எண்:1018 தனது ஒரு மாத சம்பள பணம் 25,788 ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.இதற்கான காசோலையை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் வழங்கினார்.
இது குறித்து காவலர் பாபு கூறுகையில்,
எனது சொந்த பழனி. கடந்த பத்து வருடங்களாக கோவையில் தான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து தினமும் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நான் கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திலும் பணியில் இருந்துள்ளேன்.கண்ணுக்கு தெரியாத ஒரு கொடிய வைரஸை எதிர்த்து நாம் தற்போது போராடிக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸின் பாதிப்புகளை நேரில் பார்த்ததால் என்னால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.இதற்காக என்னால் முடிந்தது எனது ஒரு மாத சம்பள பணம் 25,788 ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினேன். என்னுடைய வருமானத்தை நம்பி தான் என் குடும்பம் உள்ளது. இருந்தாலும் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபடவேண்டும் என்பதற்கு இந்த தொகையை அளித்தேன் என்றார்.
ஆயுதப்படை தலைமை காவலரின் இந்த செயலை உயர் அதிகாரிகள், சக பணியாளர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.